Band-Aid மூலம் புற்றுநோயா? திடுக்கிடும் உண்மைகள் அம்பலம்…
Band-Aid மூலம் புற்றுநோயா? திடுக்கிடும் உண்மைகள் அம்பலம்...
Band-Aid, மாதவிடாய் தயாரிப்புகள், காண்டாக்ட் லென்ஸ் என, உடலைத் தொடும் விடயங்களில் எல்லாம் சில நிறுவனங்கள் இன்று இரசாயனங்களைச் சேர்க்கத் துவங்கியுள்ளமை சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
கிராமங்களில், பிள்ளையை போட்டு பலாப்பழம் எடுத்த கதை என்று உண்டு. அதாவது, ஒரு பெண் ஒரு ஓடை பக்கமாக நடந்து செல்லும்போது, தண்ணீரில் ஒரு பெரிய பலாப்பழம் மிதந்து செல்வதைக் கண்டாளாம்.
உடனே, பிள்ளையை கரையில் வைத்துவிட்டு பலாப்பழத்தை எடுக்க ஓடையில் இறங்கியிருக்கிறாள். ஆழம் தெரியாமல் காலை விட்டு தட்டுத் தடுமாறி விழுந்து எழுந்து பலாப்பழத்தை எடுத்துக்கொண்டு கரைக்குத் திரும்பினால், பிள்ளையைக் காணவில்லை. அம்மாவைப் பின்தொடர்ந்து தண்ணீரில் இறங்கிய பிள்ளையை தண்ணீர் கொண்டுபோய்விட்டது. அப்புறம் குய்யோ முறையோ என சத்தமிட்டு என்ன பிரயோஜனம்?
அப்படித்தான் இருக்கிறது இன்றைய உலக நடைமுறைகள். அதிக லாபத்துக்காக, உணவில் நச்சு உரம், ரசாயனங்கள் என்று சேர்த்து லாபம் பார்த்துவிட்டு, அனுபவிக்க உடல் நலமே இல்லாமல் போனால், லாபம் பார்த்த பணத்தை வைத்து என்ன செய்யமுடியும், மருத்துவமனைக்குத்தான் செலவு செய்யவேண்டியிருக்கும்!
Band-Aid முதல் மாதவிடாய் தயாரிப்புகள் வரை
சமீபத்திய ஆய்வு முடிவுகளிலிருந்து, Band-Aid மற்றும் CVS Health போன்ற தயாரிப்புகளில், ‘organic fluorine’ என்னும் ரசாயனம் இருப்பது தெரியவந்துள்ளது.அதாவது ஒரு பொருளில் organic fluorine இருந்தால், அதில் PFAS என்னும் per- and poly-fluoroalkyl வகை ரசாயனங்கள் உள்ளன என்பது பொருள்.
இந்த ரசாயனங்கள், மனிதனின் நோயெதிர்ப்பு சக்தி மண்டல பாதிப்பு, மனித உடல் தடுப்பூசிக்கு பலனளிக்காமல் போவது, குழந்தைகளின் கல்வித்திறன் பாதிப்பு, வளர்ச்சிக் குறைபாடு மற்றும் சிலவகை புற்றுநோய்கள், இனப்பெருக்க மண்டல பாதிப்பு, ஹார்மோன் பிரச்சினைகள் போன்ற பல பிரச்சினைகளுடன் தொடர்புடையவை ஆகும்.
PFAS எதற்காக பயன்படுத்தப்படுகின்றன?
உண்மையில், இந்த PFAS புண்ணை ஆற்றுவதில் எந்த பங்கையும் ஆற்றவில்லை. அவை waterproofing என்னும் தண்ணீர் புகாமல் தடுப்பதற்காகவும், மரச்சாமான்கள், உடைகள் போன்றவற்றில் வெப்பம், எண்ணெய், கறை பிடிக்காமல் இருத்தல் என்பது போன்ற விடயங்களுக்காகத்தான் பயன்படுத்தப்படுகின்றன.
அதிர்ச்சிக்குரிய விடயம் என்னவென்றால், இந்த PFAS, காண்டாக்ட் லென்ஸ், பாஸ்தா, தக்காளி சாஸ், மாதவிடாய் தயாரிப்புகள், வெண்ணெயை சுற்றி வைக்கும் காகிதம், குழந்தைகளுக்கான டயாப்பர்கள், ஆணுறைகள், டியோடரண்டுகள் என மனிதன் எதையெல்லாம் தன் உடலை தொடும் வகையில் பயன்படுத்துகிறானோ, அவற்றிலெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டுவருகின்றன என்பதுதான்!
இதில், Band-Aid என்பது, குழந்தைகளுக்குப் பயன்படுத்தப்படும் பவுடரில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதாக ஏற்கனவே சர்ச்சையை உருவாக்கிய ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.