இஸ்ரேலில் தேசிய நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இஸ்ரேலுக்காக போரில் பங்கேற்று உயிர்நீத்த ராணுவ வீரர்கள் மற்றும் பயங்கரவாத செயல்களால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இந்த தினம் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு நாடு முழுவதும் 2 நிமிடம் சங்கொலி எழுப்பப்படும். அதன்பின் அரசியல் தலைவர்கள், பாதிக்கப்பட்ட வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கல்லறைகளுக்கு சென்று மவுன அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
இஸ்ரேலில் கடந்த காலத்தில் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் போரில் உயிரிழந்தும், 4,200க்கும் மேற்பட்ட மக்கள் பயங்கரவாத தாக்குதலுக்கு பலியாகியும் உள்ளனர்.
இந்நிலையில், வீரர்களை நினைவுகூர்ந்து, அஞ்சலி செலுத்தும் இந்த நிகழ்ச்சி இன்று மாலை வரை நடைபெறும். இதற்காக சமரியா நகரில் இருந்து சென்றவர்களில் சிலர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.