யாழ் நெடுந்தீவு கொலை சந்தேக நபர் தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு!
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் ஐந்து முதியவர்களை படுகொலை செய்த நபரை எதிர்வரும் 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜே. கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை நெடுந்தீவு இறங்கு துறைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து ஐந்து முதியவர்களின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

சந்தேக நபர் கைது
அத்துடன் , சம்பவத்தில் 100 வயதான மூதாட்டி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், குறித்த வீட்டில் இரண்டு தினங்களுக்கு முன்பிருந்து தங்கியிருந்த நபரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
கைதானவர் வெளிநாடொன்றில் வசித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டவர் எனவும் பொலிஸரார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊர்காவற்துறை நீதவான் முன்னிலையில் முற்படுத்திய பொலிஸார் சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க ஏதுவாக 48 மணி நேரம் பொலிஸ் காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுக்க அனுமதிக்க வேண்டும் என மன்றில் கோரினர்.
கொலைக்கான ஆயுதம் மீட்பு
பொலிஸாரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மன்று , 48 மணி நேரத்தின் பின்னர் சந்தேகநபரை மன்றில் முற்படுத்துமாறு பணித்தது.
இதனையடுத்து நேற்று திங்கட்கிழமை சந்தேக நபரை சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு அழைத்து சென்ற பொலிஸார் , சம்பவ இடத்தில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன் , கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் கொலை செய்யும் போது உடுத்தியிருந்த சாரம் என்பவற்றை வீட்டின் கிணற்றில் இருந்து பொலிஸார் மீட்டு இருந்தனர்.
அதனை அடுத்து மேலதிக விசாரணைகள் முடிவடைந்த நிலையிலும் மன்றினால் வழங்கப்பட்ட 48 மணிநேர அவகாசம் முடிவடைய இருந்த நிலையில் இன்றைய தினம் சந்தேகநபரை பொலிஸார் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியபோது சந்தேகநபரை எதிர்வரும் 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
https://youtu.be/_w–b-RZ_MY