கிளி,முல்லை பகுதிகளை உள்ளடக்கி மிகப்பெரிய ராணுவ தளம் – வெளி வந்த உண்மை
இலங்கையின் வடக்கு மாகாணத்தின் 3 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையிலான நிலப்பரப்பரப்பில் 150 ஏக்கர் நிலம் இதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய 3 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் ஓர் மிகப்பெரும் இராணுவத் தளத்தை சீனா விரைவில் அமைக்கவுள்ளது.
இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டுள்ள இடம் யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணிக்கும் சமயம் இயக்கச்சி சந்தியில் ஆணையிறவு நோக்கி திரும்பும் சமயம் கிழக்கே ஓர் மண் பாதை பயணிக்கின்றது.
இவ்வாறு பயணிக்கும் மண் பாதையில் இயக்கச்சி சந்துயில் இருந்து 7 மைல் தூரம் பயணித்தால் அங்கே சுமார் 700 ஏக்கர் நிலப்பரப்பில் ஓர் மிகப் பெரிய இராணுவ முகாம் ஒன்றை இலங்கை இராணுவத்தினர் தற்போது அமைத்துள்ளனர்.
அதன் அருகே உள்ள 150 ஏக்கர் நிலமே இவ்வாறு சீனப் படைகளின் கண்காணிப்பு நிலையம் ஒன்றை நிறுவுவதற்காக வழங்கி அதன் பாதுகாப்பிற்காக சுற்றுப் புறத்தில் இலங்கை இராணுவமே நிலைகொள்ளவுள்ளதனால் அப் பகுதிகள் அனைத்துமே இலங்கை இராணுவத்தின் முகமாகவே காட்சியளிக்கும்.
இந்த 150 ஏக்கர் முடிவடையும் இடத்தில் இருந்து 800 மீற்றர் தூரத்திற்கும் உட்பட்ட பகுதியில் கடலும் உள்ளது.
இங்கே அமைக்கும் சீனாவின் கண்காணிப்பு நிலையத்திற்கு வந்து செல்லும் சீன நாட்டவர்கள் எவரும் நகரின் மத்தியின் ஊடாகவோ அல்லது பிரதான வீதிகள் வழியாகவோ பயணிக்காது இரகசியமாக பயணிப்பதற்கான வழிவகையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய இங்கே தளம் அமைக்கும் சீனப் படையினர் கொழும்பில் இருந்து விமானம் மூலம் இரணைமடு விமான நிலையத்தை பயன்படுத்தவும் அனுமதிக்கப்படுகின்றது.
இரணைமடு விமான நிலையம் என்பது இரணைமடுக் குளத்திற்கு கிழக்கே உள்ளது. இது வடக்கே அம்பகாமம், தெற்கே கரிப்பட்டமுறிப்பு, மேற்கே இரணைமடுக் குளத்திற்கு நடுவே 8 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள விமானப்படைத் தளமாகும். இந்த 8,000 ஏக்கரில் 3,000 ஏக்கரும் சீனாவின் பயன்பாட்டிற்கு வழங்கப்படவுள்ளது.
இவ்வாறு இரணைமடு விமானத்தளத்தில் இறங்கும் சீன நாட்டவர் அம்பகாமம், வட்டக்கச்சி ஊடாக தர்மபுரம், வெளிக்கண்டலிற்கு பயணித்து இந்த 150 ஏக்கர் தளத்தை மிக இரகசியமாக அடையமுடியும். இதற்காக 30 கிலோ மீற்றர் தூரம்கூட பயணிக்க வேண்டிய அவசியமே கிடையாது.
இதனால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு எல்லையில் அமையும் கடல், ஆகாயம் மற்றும் தரைக் கண்காணிப்பு நிலையத்தில் இருந்து சுமார் 100 கிலோ மீற்றர் தொலைவிலேயே இந்தியா இருக்கின்றது.
இதனால் இங்கே அமையும் சீனக் கண்காணிப்பு நிலையத்தில் இருந்து இந்தியாவே குறிவைக்கப்படலாம் எனத் திடமாக நம்பப்படுகின்றது. இதனால் இந்த தளத்தினால் இலங்கைக்கு ஏற்படும் ஆபத்தினைவிடவும் இந்தியாவிற்கே பெரும் ஆபத்து காத்திருக்கின்றது.