கோட்டா கோ ஹோம் பிண்ணனியில் ஜே.வி.பி : 120 பேரை பலி கொடுக்க போட்ட திட்டம்.!
கோட்டா கோ ஹோம் பிண்ணனியில் ஜே.வி.பி : 120 பேரை பலி கொடுக்க போட்ட திட்டம்.! சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒரே இரவில் அவர்களது குடும்பங்களுடன் கொலை செய்வதற்கு சதித் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்ததாக பகீர்த்தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் ஜே.வி.பியினர் இருந்தார்கள் எனவும் பகிரங்கமான குற்றச்சாட்டு ஒன்றை, மொட்டுக்கட்சியைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த தற்போது முன்வைத்துள்ளார்.
ஜே.வி.பியின் சதி முயற்சி
தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
கொழும்பு காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த கோட்டா கோ ஹோம் போன்று நாடு முழுவதும் 120 போராட்டக் களங்களை அமைத்து, பொதுஜன பெரமுனவின் 120 நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர்களின் குடும்பங்களுடன் ஒரே இரவில் கொல்வதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.
எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரின் உத்தியோகபூர்வ இல்லங்களில் ஜே.வி.பியினர் திருட்டுத்தனமாகத் தங்கி இருக்கின்றனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.
நாட்டை கைப்பற்ற முயற்சித்த பயங்கரவாதிகள்
சிறிலங்கா நாடாளுமன்றத்தை பலவந்தமாகக் கைப்பற்ற முயற்சி செய்தார்கள். அவ்வாறு நடந்திருந்தால் நாடு எங்கேயோ சென்றிருக்கும். பயங்கரவாதிகள் சிலர் பலவந்தமாக நாட்டைக் கைப்பற்றுவதற்கு முயற்சி செய்த நேரம் அது.
அதுமட்டுமன்றி போராட்டத்தின் போது, எங்களது வீடுகளை எரித்தவர்கள் இவர்கள். இந்த நாட்டுக்கு அநியாயம் செய்தவர்கள் இவர்கள். இவர்களுக்கு வாக்கு வங்கி கிடையாது. ஜே.வி.பி. உறுப்பினர்கள் அனைவரினதும் பிள்ளைகள் படித்தது வெளிநாட்டில் தான்.
திறமையான அதிபர்
திம்புலாகல பிரதேச சபை சார்பில் ஜே.வி.பி.யில் போட்டியிடும் உறுப்பினர் ஒருவர் சாராயக் கடைக்குச் சொந்தக்காக்காரர். அனைத்துக் கட்சிகளிலும் பிழை செய்பவர்கள் இருக்கின்றார்கள்.
ஆனால், ஜேவி.பி. மட்டும் தப்பு செய்யாதவர்கள் போல் நடிக்கின்றார்கள். இப்போது பொருளாதார நிலைமை மெல்ல மெல்ல சரியாகி கொண்டு வருகின்றது. நாம் மிகவும் திறமையுள்ள அனுபவமுள்ள ஒருவரை தான் நாட்டின் அதிபராக நியமித்துள்ளோம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.